Now Reading
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். விசாரணையில் இதற்கு முன்னரும் இதேபோல வேறொரு பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிகிறது காவல்துறை. எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து பெண்களைக் குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) ஒருவன்தான் இதனைச் செய்கிறான் என விசாரணையில் இறங்குகிறது உள்ளூர் போலீஸ். விசாரணையில் அவர்கள் திணற, வழக்கு சிறப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு எஸ்.பி லோகநாதனிடம் (சரத்குமாரிடம்) வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படுகிறது. புதிதாக டி.எஸ்.பி போஸ்டிங் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) அவரிடம் பயிற்சி பெறுவதற்காக இணைய, இந்தப் புலனாய்வுக் கூட்டணி நெஞ்சை உரைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறிச் செயல்களைத் தடுக்கிறதா, கொலைகாரன் உண்மையில் யார், ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்கிறது ‘போர் தொழில்’.

சாக்லேட் பாய் லுக்கில் பயந்த சுபாவம், தயக்கம், தடுமாற்றம் என ஓர் இளம் காவல்துறை அதிகாரியாக அசோக் செல்வன். எல்லோரும் பேசிக் கொள்ளும் இடத்தில் தானும் ஏதாவது பேசி தன் அறிவை நிரூபிக்க நினைப்பது, எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய வழக்கினைச் சுமப்பதால் அதற்கான அனுபவமில்லாத தன்மையை வெளிக்காட்டி திணறுவது என ஹீரோயிஸ பூச்சு இல்லாத யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பெஞ்சு மாணவன் போலப் புத்தக அறிவை வைத்துப் பேசும் காட்சிகளிலும் ஆழமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

இவர்களுக்கு உதவியாக வரும் நிகிலா விமல் வழக்கமான த்ரில்லர் படங்களில் கதாநாயகிக்கு இருக்கும் அதே பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜீப் டிரைவராக நடித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன் சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர மறைந்த நடிகர் சரத்பாபுவும் கதையின் ஓட்டத்தில் கவனம் பெறுகிறார்.

முதல் பாதியிலேயே முடிச்சுகளை அவிழ்த்துவிட்டதால் (?) இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்றே தொய்வைச் சந்திக்கிறது. இருப்பினும் வெறுமனே பார்வையாளர்களைப் பயமுறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் குற்றத்தையும், குற்றத்துக்கு முந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில் ஆல்ஃபிரட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியின் பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.

காட்சியின் தன்மையைப் பிரதிபலித்து, வில்லன் யாரென்று தெரிவதற்கு முன்பே வில்லனாக அலற வைத்திருக்கிறது ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை. இசை தேவையில்லையென நிசப்தமாக அவர்விட்ட இடங்களும் காட்சியின் அழுத்தத்தை மேலும் கூட்டி இருக்கின்றன. திடீர் திடீரென வரும் சச்சின் சுதாகரன், ஹரிஹரனின் சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது. கதையின் சூழல் தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது என்றாலும் பிளாஷ்-பேக் காட்சிகளில் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.

கோரமான கொலைக் காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அப்துல் ரசாக்கின் பிராஸ்தெடிக் மேக்-அப். குறைவாகவே வரும் சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு இன்னுமே சிரத்தையுடன் கையாண்டிருக்கலாம்.

See Also

இருப்பினும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா, சீரியல் கில்லர்களை நியாயப்படுத்தாமல் குற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து ஒரு பக்குவமான ஆரோக்கியமான உரையாடலை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதைத் தன் இரண்டு பிரதான பாத்திரங்கள் வழியேவும் பேசியிருப்பது புத்திசாலித்தனமான காட்சியமைப்பு.

 

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)